கனவுகள்! ஏன்?
“அடடே, இப்படி முன்னமே யோசித்திருந்தல், இதை வேறு மாதிரி செய்திருக்கலாமோ அல்லது அப்படி நடக்காமலேயே தடுத்து இருக்கலாமோ, அல்லது ஏதாவது புதுவிதமாக செய்திருக்கலாமோ” என நான் பலமுறை ஆதங்கப்பட்டதுண்டு. இப்படி அடிக்கடி ஆதங்கபடுவதை எப்படி மாற்றுவது என எனக்குள் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருந்தது. இக்கேள்விக்கு விடைகாண பலநாட்களாக தேடலில் மூழ்கியதில், அறிந்தவைகளை பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கமாகும்.
எமக்கு ஆதங்கம் ஏற்படுவதற்கான காரணிகளைப் பார்த்தோமானால், எமது ஏதோ ஒரு தேவை சரியாக விளங்கிக்கொள்ளப்படாமையோ அல்லது நிவர்த்தியாகாமையோ காரணமாகிறது. இத்தேவைகளின் தன்மைகளையும் அவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளையும் பிரைன் ரெசி (Brian Tracy) அவர்கள் "வெற்றிக்கான உளவியல்" என்னும் நூலில் எப்படி விளக்கியுள்ளார் என சற்று கவனிப்போம்.
மனிதனின் சோம்பல், அவா, ஆர்வம், அறியாமை, தன்னலம் மற்றும் தற்பெருமை போன்ற அடிப்படை குணவியல்புகளே தேவையின் அளவையும், அவைக்கான காலத்தையும் தீர்மானிக்கின்றன. இக்குணவியல்புகள் நல்லவையே, தீயவையோ என்பதல்ல, இவை மனித இயல்புகளின் அடிப்படையானவை என்பதே இங்கு முக்கியமாகிறது. இவையே ஒருவருடைய பாதுகாப்பு, வசதி, ஓய்வு, அன்பு, மதிப்பு, சேவையின் நிவர்த்தி போன்ற தேவைகளின் பரிமானங்களை தீர்மானிக்கின்றன. இத்தேவைகளின் அளவும் பரிமானங்களும் அவரவர்களுக்கு வேண்டியதற்கமைய காலத்துக்கு எற்றபடி மாறுபடக்கூடியவை. அத்துடன் எப்போதும் இத்தேவைகளைப் பூர்த்திசெய்ய விரைவானதும் இலகுவானதுமான வழிமுறைகளையே மனிதர்கள்
சாதாரணமாக நாடிச்செல்கிறார்கள்.
எமது தேவைகளும் அவற்றின் பரிமானங்களும் காலத்துக்குக் காலம் மாறுபடக் கூடியவையாயின், எக்காலத்தில் எப்படிபட்ட தேவைகள் எமக்கு தேவைப்படும், அவற்றை பூர்த்திசெய்ய எமக்கு எவ்வளவு காலம் வேண்டும் என்பதை எம்மால் முன் கூட்டியே தீர்மானிக்க முடிந்தால் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஆதங்கம் ஏற்படாது அல்லவா!
இவற்றையே திருக்குறளில் திருவள்ளுவர் இப்படி சொல்கிறார் பொலும்.
எதிரதாக் காக்கும் அறிவினர்க் கில்லை
அதிர வருவதோர் நோய் - குறள் 429
அதாவது, வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. வரப்போவதை முன்னே அர்ரிந்துகொல் எப்படிப்பட்டவர்களால் முடியும்? அதையும் திருக்குறள் இப்படி சொல்கிறது.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர் - குறள் 427
அதாவது, அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லவர், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர். இவ்விரு குறள்களிலும் இருந்து ஒரு பொது விடயத்தை என்னால் உணரமுடிகிறது. நான் எனது எதிர்காலத்தை எண்ணி அறிந்து அவற்றுக்கேற்றாற்போல் செயலாற்றுவதே அறிவுடையாமையாகும். அதுமட்டுமல்லாமல் வரும் துன்பங்களும் என்னைப் பாதிக்காது.
அடடே! தேவையான வழிகாட்டியை (திருக்குறள்) வீட்டுக்குள் வைத்துக்கொண்டு, உலகெல்லாம் தேடுகிறேனோ, என மீண்டும் ஒரு ஆதங்கம் ஏற்படுகிறதே. எனினும் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள், தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்கிற பாரதியாரின் சொல்லு நினைவுக்கு வரவே எனது தேடலைத் தொடர்கிறேன்.
ஓவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள் அந்தவகையில் ஒவ்வொருவரும் ஏதொ ஒரு வகையில் அறிவாளிகளே. அப்படியாயின் எம்மால் ஏன் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிய முடியாமல் இருக்கிறது. அல்லது அறியமுடியும் எனபதை உணரமுடியாமல் இருக்கிறோமோ? அதுதான் போலும் நாம் எல்லாம் சோதிடத்தை நம்பி சோதிடரை நாடிச்செல்கிறோமோ? இன்னொருவர் எனது எதிர்காலத்தை எனக்கு காண்பிப்பதைவிட நானே எனது எதிர்காலத்தை தீர்மானிப்பது எனக்கு நம்பிக்கையளிக்க கூடியதாக இருக்கும் அல்லவா.
"நீங்கள் கற்பனை செய்யும் ஒவ்வொன்றும் நிதர்சனமானவை அப்படி கற்பனை செய்யும் ஒவ்வொன்றும் நிதர்சனமாயின், அவற்றை படைக்கும் செயற்பாட்டை எளிமையாக கனவுகளின் மூலமே உங்களால் தொடங்கிவிட முடியும். அப்படியாயின் ஏன் காணும் கனவுகள் பெருங்கனவுகளாக இருக்ககூடாது?" என கேட்கிறார் பிரபல ஓவியரான பிக்காசோ அவர்கள்.
எவ்வளவு பெரியளவில் எம்மால் கனவுகளை உருவாக்ககூடியதாக இருக்குமோ அவ்வளவுக்கு அபாரமான செயல்களை செய்யக்கூடிய, தொலைநோக்குள்ள எதிர்காலம் குறித்து எம்மால் அறியமுடியும். அதுமட்டுமல்லாமல் அவ்வெதிர்காலம் எப்படி அமையவேண்டும் எனபதை கனவுகள் மூலம் தீர்மானித்து, கனவுகள் மூலமே அவற்றை செயற்படுத்த வேண்டிய வழிமுறைகளையும் உருவகிக்க முடியும். எம்மால் இவற்றை செய்ய முடியுமா என்றால்? ஆம் நிச்சயமாக முடியும் என்றே நான் கருதுவேன், ஏனென்றால் நாம் மட்டுமே உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த மனம் எனும் சிம்யுலெற்றருடன் (Simulator) படைக்கப்பட்டுள்ளோம். எமது மனமானது மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கம்பியூட்டர் எனபதால் எவ்வளவு சிக்கலான கனவையும் எளிதில் சிம்யுலேட் (Simulate) செய்து பார்க்கமுடியும் அல்லவா.
இப்படியாக நான் உலகெல்லாம் எனது தேடலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய வேளை, வீட்டிலிருந்த ஒரு பழமொழி கண்ணிலபட்டது. அப்பழமொழி முழுமையானதா என்ற கேள்வி என்னை உறுத்தியது காரணம் இப்பதிவின் பொருளையே அது பொய்யாக்கிவிடும். அப்படியாயின் இப்பழமொழி முழுமை பெற எவவகையில் அப்பழமொழியை எழுதமுடியும் என யோசித்த போது, என் சிந்தையில் பட்டதை வாசகர் முடிவுக்கே
விட்டுவிடுகிறேன்.
"பகல் கனவு பலிக்காது, மெய்ப்பிக்கும் முயற்சி
இல்லையெனில்"
1 comments:
இறங்குமுக இலக்கங்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்
Post a Comment